ஆம்ஆத்மி கட்சித் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் மீது அடுத்தடுத்து அவதூறு வழக்குகள் பதியப்பட்டன. இதையடுத்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் ஆகியோரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆம்ஆத்மி கட்சி சமீபத்தில் இந்தியாவின் ஊழல்வாதிகள் என்ற ஒரு பட்டியலை வெளியிட்டது. அதில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் தனியார் நிறுவனத்திடம் இருந்து தொலைதொடர்புத்துறை வரி விலக்கு அளிப்பது தொடர்பாக லஞ்சம் கேட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் மற்றும் அவரது மகன் அமித் சிபல் ஆகியோரது பெயர் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், தங்கள் மீது தேவையற்ற ஆதராமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகக் கூறி நிதின் கட்கரி மற்றும் கபில் சிபல் மகன் அமித் சிபல் ஆகியோர் தனித்தனியே அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தனர்.
இதையடுத்து, அரவிந்த் கேஜரிவால் பகிரங்க மன்னிப்பு கேட்டும், தனிப்பட்ட முறையில் எவ்வித கோபமும் இல்லை எனவும் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதினார். இதனைத் தொடர்ந்து இருவரும் நேரில் சென்று அவதூறு வழக்கினைத் திரும்பப்பெற்றனர். அதுபோல கபில் சிபல் மற்றும் அவரது மகன் அமித் சிபல் ஆகியோரிடமும் மன்னிப்பு கோரினார்.
முன்னதாக, போதை பொருட்களைக் கடத்தி வியாபாரம் செய்வதாகக் கூறி பஞ்சாப்பைச் சேர்ந்த அகாலிதளத் தலைவர் பிக்ரம் மஜிதியா மீது அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டினார். இதன்காரணமாக, பஞ்சாப் ஆம்ஆத்மி கட்சி கேஜரிவாலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது. அதன் முக்கியத் தலைவர்கள் விலகினர். பின்னர், பிக்ரமிடம் கேஜரிவால் மன்னிப்புக் கேட்பதாகக் கூறினார்.