மும்பை ரயில் மறியல் போராட்டம் வாபஸ்: மத்திய அமைச்சருடன் பேச்சுவார்த்தை

ரயில்வேத்துறையில் பயிற்சி முடித்தவர்கள் தங்களுக்கு பணி வழங்கக்கோரி நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மும்பை ரயில் சேவை மீண்டும்துவங்கியுள்ளது.
மும்பை ரயில் மறியல் போராட்டம் வாபஸ்: மத்திய அமைச்சருடன் பேச்சுவார்த்தை

மும்பை ரயில்வேத்துறையில் வேலைவாய்ப்பு பயிற்சி முடித்தவர்கள் தங்களுக்கு பணி வழங்குமாறு வலியுறுத்தி செவ்வாய்கிழமை மதுங்கா, சத்ரபதி சிவாஜி ரயில்நிலையங்களுக்கு இடையிலான ரயில்பாதையில் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதி வழியாகச் செல்லும் ரயில்சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதில் மதுங்கா - தாதர் இடையே சுமார் 3 மணிநேரங்களுக்கும் மேல் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 

திங்கள்கிழமை முதல் இணையத்தின் மூலம் இயங்கும் டாக்சி சேவைகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பணிக்குச் செல்பவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலும் மும்பை நகரில் ரயில்சேவை அதிகம் பயன்படுத்தப்படுவதால், அங்கு சுமார் 4.5 மில்லியன் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில், பயிற்சி முடித்தவர்களுக்கு பணி வழங்கும் முறை இல்லை. தனிநபரின் திறனை அதிகரிக்க பயிற்சி மட்டுமே வழங்கப்படுகிறது. இருப்பினும் நேரடி பணிநியமன அடிப்படையில் 20 சதவீத ஒதுக்கீடு நிர்ணய முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதற்காக விண்ணப்பிக்க மார்ச் 31, கடைசி நாளாகும் என்று மத்திய ரயில்வேத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இதனிடையே போராட்டம் நடைபெறும் இடத்தில் அதிகளவிலான போலீஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது அப்போது அங்கு ஏற்பட்ட கலவரத்தை தடியடி நடத்தி போலீஸார் கலைத்தனர். இதனால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது. 

பொதுமக்கள் பாதிப்படையாமல் இருக்க மும்பை பேருந்து சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் போராட்டக்காரர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அப்போது, ரயில்வேத்துறையில் நாடெங்கும் பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இந்திய ரயில்வேத்துறையின் பணி நியமனம் வெளிப்படையாகவே நடைபெற்று வருகிறது. இதில் எந்தவொரு நடவடிக்கையிலும் பாகுபாடு காட்டப்படுவது கிடையாது என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இந்த போராட்டம் காரணமாக உள்ளூர் ரயில்சேவை மட்டுமல்லாது வெளி மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்சேவையும் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அப்பகுதியில் ரயில் சேவை மீண்டும் துவங்கியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com