ஈராக்கில் உள்ள மொசூல் என்ற இடத்தில் கடந்த 2014-ல் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் உயிரிழந்துவிட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த 39 இந்தியர்களும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பணி நிமித்தமாக அவர்கள் ஈராக்கின் மொசூல் என்ற இடத்தில் இருந்துள்ளனர். அந்த இடத்தைக் கைப்பற்றிய ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இவர்கள் அனைவரையும் அப்போது கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த செய்தியை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கும்போது காங்கிரஸ் கட்சி நடந்துகொண்டது அநாகரீகத்தின் உச்சகட்டம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:
காணாமல் போனவர்களும், கடத்தப்பட்டவர்களும் போதிய ஆதாரமின்றி இறந்துவிட்டதாக அறிவிக்கும் அவதூறு செயல்களில் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஈடுபடாது. போதிய ஆதாரமில்லாமல் யாரையும் இறந்துவிட்டதாகக் கூறுவது பாவச் செயலாகும். இதில் எதையும் இருட்டடிப்புச் செய்ய விரும்பவில்லை.
மாநிலங்களவையில் இந்த துக்கச் செய்தியை நான் தெரிவித்தபோது அனைவரும் மௌனம் காத்தனர். ஆனால் மக்களவையில் நிலைமை தலைகீழானது. குறிப்பாக ஜோதிர்திய சிந்தியா தலைமையில் காங்கிரஸ் கட்சி கூச்சலும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
தன்னால் முடிந்தவரை காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமாக நடந்துகொண்டுள்ளது. இது அநாகரீகத்தின் உச்சகட்டம். இறந்தவர்களின் உடல்களில் இருந்து டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் தான் உண்மைநிலை கண்டறியப்பட்டது. இதன்பின்னர் தான் அவர்கள் அனைவரும் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது என்றார்.