மதங்களையும், ஜாதிகளையும் பிளவுபடுத்தும் பணியில் முதல்வர் சித்தராமையா ஈடுபடுவது நாகரீகமற்றது என மஜத மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.
சிக்மகளூருக்கு செவ்வாய்க்கிழமை விகாஸ்பருவ யாத்திரையில் கலந்து கொள்ள வந்த அவர், முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியது:
வீரசைவா, லிங்காயத்து மதத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். அவர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க நினைத்த சித்தராமையா, லிங்காயத்து மதத்தினரை தனிமதமாக அறிவித்து, சிறுபான்மை மக்களுக்கு வழங்கும் சில சலுகைகளை அறிவித்துள்ளார்.
மதங்களையும், சமுதாயங்களையும் ஒன்றுபடுத்தும் பணியில் முதல்வர் ஈடுபட வேண்டும். அதைவிடுத்து அரசியல் லாபங்களுக்காக மதங்களை, சமுதாயங்களை, ஜாதிகளை பிளவுபடுத்தும் பணியில் ஈடுபடக்கூடாது. வரும் தேர்தலில் சித்தராமையாவுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.
சட்டப்பேரவைத் தேர்தலில் எனது சகோதரர் எச்.டி.ரேவண்ணாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் யார் வேண்டுமென்றாலும் போட்டியிடட்டும். ஆனால், தேர்தலில் தேவ கெளடாவின் புதல்வர்கள் தோல்வியுற வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளது அகங்காரத்தின் உச்சம் என்றார்.