தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களும் பயன்பெறும் ஒரு புதிய நதிநீர் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முன்னுரிமை அளித்திருப்பதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
உலக தண்ணீர் தினத்தையொட்டி, தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் மேலும் பேசியதாவது:
மகாராஷ்டிரத்தில் பாயும் இந்திராவதி ஆற்றின் உபரி நீர், தெலுங்கானாவில் உள்ள காலேஸ்வரம் அணைக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து இரு அணைகள் வழியாக, அந்த நீர், காவிரியுடன் இணைக்கப்படும்.
இதேபோல், போலாவரம் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர், கிருஷ்ணா நதியுடன் இணைக்கப்படும். பிறகு, அந்த நீர், அங்கிருந்து கர்நாடகத்தில் உள்ள பெண்ணாறுக்கு கொண்டு செல்லப்படும். அதைத் தொடர்ந்து, மீண்டும் காவிரியுடன் அந்த நீர் வழித்தடம் இணைக்கப்படும். இதனால், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்னைக்கு கிட்டத்தட்ட தீர்வு கிடைத்துவிடும்.
கோதாவரி ஆற்றில் பாயும் 3,000 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இதேபோல், இந்திராவதி ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரும் வீணாகிறது. அவற்றை ஒருங்கிணைத்து, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் பயன்பெறும் வகையில் நதிநீர் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு 30 நதிநீர் இணைப்புத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது. அவற்றில், 5 திட்டங்கள் இந்த ஆண்டிலேயே தொடங்கப்பட்டுவிடும் என்றார் அவர்.