புதுதில்லி: விவசாயிகள் பிரச்சினையை தீர்க்கக் கோரி ஒரு வாரமாகத் தான் தொடர்ந்து வந்த உண்ணாவிரதத்தை வியாழன் அன்று அன்னா ஹசாரே நிறைவு செய்தார்.
நாட்டில் விவசாயிகள் பிரச்சினையை தீர்ப்பதற்காகச் பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன், தில்லி ராம் லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே தனது உண்ணாவிரத போராட்டத்தை கடந்த 23-ஆம் தேதி துவங்கினார்.
இந்த தொடர் உண்ணா விரத போராட்டத்தில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
வியாழனோடு 7-வது நாளாக உண்ணா விரத போராட்டம் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் அன்னா ஹசாரேவை, மத்திய விவசாயத்துறை இணை அமைச்சர் கஜேந்திர சிங் மற்றும் மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்நவீஸ் ஆகிய இருவரும் சந்திதிப் பேசினார்கள்.
இதனைத் தொடர்ந்து தனது ஒருவார கால உண்ணா விரத போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அன்னா ஹசாரே தற்பொழுது அறிவித்துள்ளார்.