பெங்களூரு: சொந்த மாநிலத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கும் பொழுது தேர்தல் பிரசாரத்தில் இங்கு இருக்கிறார் என்று சித்தராமையா விமர்சித்ததைத் தொடர்ந்து, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பாதியில் ஊர் திரும்புகிறார்.
கர்நாடகாவில் வரும் 12-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக அவுரத் என்னும் இடத்தில் தனது இரண்டு நாள் சுற்றுப் பயணத்தினை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழன் அன்று துவக்கினார். அதேசமயம் வியாழன் அன்று மூன்று இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பேசினார். அத்துடன் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் கர்நாடகாவில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சொந்த மாநிலத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கும் பொழுது தேர்தல் பிரசாரத்தில் இங்கு இருக்கிறார் என்று சித்தராமையா விமர்சித்ததைத் தொடர்ந்து, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பாதியில் ஊர் திரும்புகிறார்.
உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பல பகுதிகளில் புதன்கிழமை இரவு கடுமையான புயல் தாக்கியது. இவற்றால் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 73 பேர் மரணமடைந்துள்ளனர். 91 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதிக பட்சமாக ஆக்ராவில் 43 பேர் பலியாகியுள்ளனர்.மேலும் 51 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா வியாழன் அன்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், உத்தரப் பிரதேசத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், 'உங்கள் முதல்வரின் சேவை இப்பொழுது கர்நாடகாவிற்கு தேவைப்படுவது குறித்து வருந்துகிறேன்; விரைவில் அவர் அங்கு திரும்பி தனது கடமையைச் செய்வார் என்று உறுதியாக நம்புகிறேன்' என்று தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை மதியம் வரை கர்நாடகாவில் தங்கி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதாகக் திட்டமிட்டிருந்த ஆதித்யநாத், தன்னுடைய பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு வெள்ளி இரவே ஆக்ரா திரும்புகிறார்.
அங்கு நடைபெறும் மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்ட பின்னர் அவர் கான்பூர் சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளைப் பார்வையிடுவார் என்று மாநில தகவல் ஒளிபரப்புத் துறை முதன்மைச் செயலாளரான அவனிஷ் அஸ்வதி தெரிவித்துள்ளார்.