பெங்களூரு: தனது பேச்சுக்களின் மூலமாக பிரதமர் பதவிக்கான கண்ணியத்தை மோடி தரம் தாழ்த்தி விட்டார் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கர்நாடகாவில் வரும் 12-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தொடர்ச்சியாக தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பேசியுள்ளார். அத்துடன் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் கர்நாடகாவில் முகாமிட்டு பாஜவுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தனது பேச்சுக்களின் மூலமாக பிரதமர் பதவிக்கான கண்ணியத்தை மோடி தரம் தாழ்த்தி விட்டார் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பெங்களூருவில் அமைந்துள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவர் திங்களன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
இதற்கு முன் இருந்த எந்தப் பிரதமருமே மோடி அளவுக்கு தேர்தல் சமயத்தை இத்தகைய பேச்சுகளுக்காக பயன்படுத்தியதில்லை. அவர் தற்பொழுது தொடர்ச்சியாக செய்து வருவதைப் போன்று கர்நாடக மக்களை இரு அணிகளாகப் பிரிக்கும் வகையில் பேசுவதை நிறுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். அவர் பேசும் விஷயங்கள், அதற்காக பயன்படுத்தும் மொழியை அவர் தவிர்க்க வேண்டும்.ஒரு பிரதமர் இப்படி தரம் தாழ்ந்து போவது என்பது நாட்டுக்கு நல்லதலல.
விவசாயிகள் பிரச்னை கையாளப்படும் விதமும், நாட்டின் பொருளாதாரம் தொடர்பான விவகாரங்கள் கையாளப்படும் விதமும் திருப்தியளிக்கவில்லை.
மோடி அரசின் தவறான பொருளாதார மேலாண்மை காரணமாக கடந்த 4 வருடங்களில் 2 கோடி வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனை நாம் உடனடியாக சரி செய்யா விட்டால் நாடு மிகப்பெரிய பேரழிவை சந்திக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.