விஜயபுரா: சிறந்த நடிகர் போல பேசும் மோடியின் நடிப்புச் சொற்பொழிவு ஏழை மக்களின் வயிற்றை நிரப்பாது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கர்நாடகாவில் வரும் 12-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தொடர்ச்சியாக தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பேசி வருகிறார்.
உடல்நலக் குறைபாடால் கடந்த இரு ஆண்டுகளாக பரபரப்பு அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்த சோனியா காந்தி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பிஜய்ப்பூர் பகுதியின் விஜயபுராவில் கூட்டம் ஒன்றில் செவ்வாயன்று பங்கேற்றார்.
அப்பொழுது சிறந்த நடிகர் போல பேசும் மோடியின் நடிப்புச் சொற்பொழிவு ஏழை மக்களின் வயிற்றை நிரப்பாது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்தார்.
அந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியானது கர்நாடகாவின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து போராடி வருகிறது. ஏழை எளிய மக்களுக்காக சோர்வின்றி உழைத்து வருகிறது. ஆனால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கிய திட்டங்களை பாஜக நிராகரித்தது.
கர்நாடகாவில் வறட்சியினால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட போது, நிவாரணம் கோரி முதல்வர் சித்தராமையா பிரதமரை சந்திக்க முயன்றார். ஆனால் பிரதமர் அவரை சந்திக்க மறுத்தார்.
தற்பொழுது தேர்தல் பிரசாரங்களின் போது மோடி தொடர்ந்து தவறான கருத்துகளை பதிவு செய்கிறார். தனது மோசமான அரசியலுக்காக நாட்டின் மகத்தான தலைவர்கள் பெயரை எல்லாம் பயன்படுத்துகிறார்.
பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் ஊழலை ஒழிப்பேன் என கொடுத்த வாக்குறுதியை மோடி நிறைவேற்ற வில்லை. மோடி ஒரு நல்ல சொற்பொழிவாளர். ஆனால் நடிகர் போல பேசும் அவரின் சொற்பொழிவின் மூலம் சாதாரண மக்களின் வயிற்றை நிரப்ப இயலாது.
இவ்வாறு அவர் பேசினார்.