பாட்னா: லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாபின் திருமணத்திற்காக அடிக்கப்பட்ட வாழ்த்து போஸ்டர் ஒன்றினால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவரும் பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாபின் திருமணம் சமீபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தொடங்கி ஏராளமான அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஊழல் வழக்கில் சிறையில் உள்ள விழாவில் கலந்து கொள்ள லாலுவுக்கு மூன்று நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாபின் திருமணத்திற்காக அடிக்கப்பட்ட வாழ்த்து போஸ்டர் ஒன்றினால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
பெரிய அரசியல் புள்ளி ஒருவரின் வீட்டு விசேஷம் என்பதால் பிரம்மாண்டங்களுக்கு இடையே சில சர்ச்சைகளும் ஏற்பட்டது. திருமணத்துக்கு முந்தைய நாள் லாலுவின் வீடு அமைந்துள்ள பகுதியில் ஆதரவாளர்களால் வாழ்த்து போஸ்ட்டர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
அந்த போஸ்டரில் மணமகன் தேஜ் பிரதாப் சிங்கை சிவனாகவும் மணமகள் ஐஸ்வர்யா ராயை பார்வதியாகவும் உருவகப்படுத்தி இருந்தனர். ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியினர் இந்த போஸ்டரைக் கொண்டாடத்தான் செய்தனர்.
ஆனால் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் மக்கள் இந்த போஸ்டருக்கு கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.