பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்து வருவதைத் தொடர்ந்து, கர்நாடக ஆளுநரைச் சந்தித்த முதல்வர் சித்தராமையா தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.
கடந்த 12- ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் செவ்வாயன்று வெளியாகின. இதில் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தாலும், ஆட்சியமைக்கும் அளவுக்கு பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, மதசார்பற்ற ஜனதா தள கட்சி ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதன் மூலம் தேவேகௌடாவின் மகன் குமாரசாமி கர்நாடக முதல்வராகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
ஆட்சி அமைப்பது தொடர்பாக மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவேகௌடாவுடன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டணி ஆட்சிக்கு தேவேகௌடாவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்து வருவதைத் தொடர்ந்து, கர்நாடக ஆளுநரைச் சந்தித்த முதல்வர் சித்தராமையா தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.
இதுதொடர்பாக செவ்வாயன்று ஆளுநர் இல்லம் சென்று ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்த சித்தராமையா, அவரிடம் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.