கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் தொங்கு சட்டப்பேரவை அமைந்துள்ளது. இதில், தனிப்பெரும் கட்சியாக பாஜக 103 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆளுநரிடம் ஆட்சி அமைக்கக் கோரியது. இவர்களைத் தொடர்ந்து பெரும்பான்மை உள்ளதாக காங்கிரஸ் - மஜத கூட்டணியும் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கோரியது.
இந்நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் - மஜத கூட்டணி புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) தனித்தனியே நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு காங்கிரஸ் மற்றும் மஜத சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்தடைந்தனர்.
அப்போது காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில்,
சித்தராமையா:
"அனைத்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். யாரும் விட்டுபோகவில்லை. அதனால், நாங்கள் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிகக்கையில் இருக்கிறோம்."
குலாம் நபி ஆசாத்:
"மஜதவுக்கு அவர்களது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் நம்பிக்கை உள்ளது. யாரும் எங்கும் போகவில்லை. பாஜக அவர்களுக்கு வேண்டியதை முயற்சிக்கட்டும்." என்றனர்.
பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை இருப்பதால் குதிரைப் பேரம் நடக்கலாம் என்ற பேச்சுகள் எழுந்தது. இந்நிலையில், காங்கிரஸ் - மஜத கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் நடைபெறுகிறது என்று தலைவர்கள் கூறியிருப்பது அவர்களுக்கு பலம் சேர்த்துள்ளது.
இதைத்தொடர்ந்து, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமும் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.