கர்நாடகாவில் தொடங்கி உள்ள அரசியலமைப்பு படுகொலையை சந்தோசமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காததால் ஏற்பட்டுள்ள பரபரப்புகளுக்கும், களேபரங்களுக்கும் இடையே கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுள்ளார். எடியூரப்பா ஆளுநரிடம், பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கேட்டிருந்த நிலையில், ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், கர்நாடகா பேரவை தேர்தலில் பாஜகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்த பிரகாஷ்ராஜ் தற்போது நடக்கும் அரசியல் கூத்து குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ''கர்நாடகாவில் அரசியலமைப்பு படுகொலை தொடங்கிவிட்டது. இனி மக்கள் எந்த விவகாரங்களில் சிக்குகிறார்கள் என்ற எந்த தகவலும் வெளியே வராது. ஆனால் எம்.எல்.ஏ.க்கள் எங்கே செல்கிறார்கள், எந்த சொகுசு விடுதியில் எந்த எம்.எல்.ஏ இருக்கிறார் என்ற புகைப்படம், அரசியல் சாணக்கியத்தனம் என்று வரிசையாக உடனடி செய்திகள் வரப்போகிறது. சந்தோசமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்'' என்று வருத்தத்தை தெரிவித்துள்ளார்.