பெங்களூரு: பாஜகவை நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற உத்தரவால் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
பெங்களூருவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த குலாம் நபி ஆசாத், கர்நாடக ஆளுநரை சந்தித்து பாஜக உரிமை கோருவதற்கு முன்பே, காங்கிரஸ் - மஜத சார்பில் ஆட்சியமைக்க உரிமை கோரப்பட்டது.
காங்கிரஸ், மஜத மற்றும் 2 சுயேச்சை எம்எல்ஏக்களுடன் சேர்ந்து 117 பேரின் ஆதரவு உள்ளது. ஆனால், எந்த அடிப்படையும் இல்லாமல் ஆளுநர் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்துள்ளார். காங்கிரஸ் - மஜத கூட்டணிக்கு தேவையான பெரும்பான்மை பலம் உள்ளது. இப்போது அழைத்தால் கூட பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்.
சில ஆளுநர்கள் அரசியல் சாசனப்படி செயல்படுவதில்லை. மணிப்பூர், மேகாலயா, கோவா மாநிலங்களில் கூட்டணி கட்சிகளே ஆட்சியமைக்க அழைக்கப்பட்டது. அரசியல் அமைப்பை காக்க வேண்டியவரே அதை மீறுகிறார். பெரும்பான்மையை நிரூபிக்க அதிகபட்சம் 7 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்படும். ஆனால், கட்சிகளை உடைப்பதற்காகவே பாஜகவுக்கு 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில் எந்த அரசுக்கும் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்படவில்லை என்று குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.