பெங்களூரு: காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவர்கள் பேசியதற்கு ஆதாரம் உள்ளது: என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக சட்டப்பேரவையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது.
ஒரு வார கால அவகாசம் கேட்ட எடியூரப்பா தரப்பின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக சட்டப்பேரவையில் நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தவும், ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றும், வெளிப்படையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் கைகளை உயர்த்தி வாக்கெடுப்பு நடத்தும் வகையில் நடத்தவும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.அத்துடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் வரை, எடியூரப்பா அரசு கொள்கை முடிவு எடுக்கத் தடை விதிப்பதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை எடியூரப்பா அரசு எந்த நியமன எம்எல்ஏவையும் நியமிக்கக் கூடாது என்றும், மூத்த எம்எல்ஏ ஒருவரை தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்து வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
கர்நாடகாவில் நியமன எம்எல்ஏவுக்கு வாக்களிக்கும் உரிமை இருப்பதால், நியமன எம்எல்ஏக்களையும், ஆங்கிலோ இந்தியன்களையும் எம்எல்ஏக்களாக நியமிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவர்கள் பேசியதற்கு ஆதாரம் உள்ளது: என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும்பொழுது அவர் கூறியதாவது:
தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களிடம் ஜனார்த்தனரெட்டி, எடியூரப்பா, ஸ்ரீராமுலு ஆகியோரிடம் அவர்கள் பேசியதற்கான ஆடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது. என்ன என்ன சலுகைகள் வழங்குவதாக அவர்கள் கூறினார்கள், எப்படி குதிரைபேரத்தில் ஈடுபட்டார்கள் என்பதெல்லாம் அந்த ஆடியோவில் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.