புதுதில்லி: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் கர்நாடகாவில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்களன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுதுஅவர் கூறியதாவது:
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. காங்கிரசும் மத்சசார்பற்ற ஜனதா தளமும் ஒன்றையொன்று எதிர்த்து கடுமையாக தேர்தல் களத்தில் நின்றன. ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பொருந்தாத சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர்.
தேர்தல் சமயத்தில் எல்லா விதமான தேர்தல் விதிமீறல்களிலும் காங்கிரஸ் ஈடுபட்டது. ஜாதி மத விஷயங்களை பயன்படுத்தி வெற்றி பெற முயற்ச்சித்தது.
ஆனால் ஊழல் முத்திரை பதிந்துள்ள காங்கிரஸ் வெற்றி பெறுவதை மக்கள் விரும்பவில்லை. அதே போல காங்கிரஸ் - மஜத கூட்டணியையும் மக்கள் புறக்கணிப்பர்.
தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள பாஜகவுக்கே ஆட்சியமைக்க எல்லா உரிமையும் உள்ளது. காங்கிரஸ் ஏன் தோல்வியை கொண்டாடி வருகிறது என்று தெரியவில்லை.
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் கர்நாடகாவில் மறுதேர்தல் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.