ரஷியாவின் சோச்சியில் அந்நாட்டு அதிபர் புதினை பிரதமர் மோடி திங்கள்கிழமை சந்தித்தார். சர்வதேச விவகாரங்கள் குறித்தும், இந்தியா-ரஷியா இடையேயான இருதரப்பு உறவு குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தப் பயணத்துக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். இதுவொரு சிறந்த நிகழ்வாகும். இது இரண்டு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. எனது அரசியல் வாழ்க்கையில், ரஷியாவும், புதினும் மிகவும் முக்கியமானவர்கள் என்றார்.
புதின் கூறுகையில், மோடியின் பயணத்தின் மூலம், இருதரப்பு உறவுக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது. ரஷியா-இந்தியா பாதுகாப்பு அமைச்சகங்கள் தங்களிடையேயான நெருங்கிய தொடர்பையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து பராமரித்து வருகின்றன. இதுவே நமது நாடுகள் இடையே மிகப்பெரிய ராஜீய கூட்டுறவு நிலவுவதை தெரியப்படுத்தும் என்றார்.
பின்னர், அங்குள்ள ரஷியா கலாசார அரங்கை பார்வையிட்டார். மேலும் சிரியஸ் கல்வியரங்கில் உள்ள மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அனைவரையும் இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதையடுத்து இருநாடுகளின் தலைவர்களும் அங்கிருக்கும் புகழ்பெற்ற கறுங்கடல் பகுதியில் படகு சவாரி செய்தனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு செவ்வாய்கிழமை அதிகாலை இந்தியா திரும்பினார்.