கர்நாடக சட்டப்பேரவையில் முதல்முறையாக மின்னணு வாக்கு இயந்திரத்துடன் இணைக்கக்கூடிய விவிபேட் கருவியின் பயன்பாடு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் தங்களின் வாக்குப்பதிவை உறுதி செய்துகொள்ள முடியும்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த நிலையில், விஜயபுரா மாவட்டத்தின் பசவனபாகேவாடி வட்டத்தின் மனகுலி கிராமத்தில் 8 விவிபேட் கருவிகள் தேசிய நெடுஞ்சாலை தொழிலாளர்கள் தங்கியிருந்த கொட்டகையில் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் வாக்குச் சீட்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பாஜக தலைவர் எடியூரப்பா, தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
விஜயபுரா மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட 8 விவிபேட் கருவிகள் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். இதுபோன்ற செயல்கள் கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் நடந்த உச்சகட்ட விதிமீறல் சம்பவங்களை எடுத்துக்காட்டுகிறது.
இதுபோன்ற தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் ஒன்றும் புதிதல்ல. வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முன்பே இதுபோன்ற பல தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். இருப்பினும் இதில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றார்.