ஆர்எஸ்எஸ் அமைப்பு தேர்வு செய்யும் நபர்களை ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நிலை மற்றும் துறைகளை ஒதுக்கீடு செய்யும் நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேர்வில் வெற்றி பெற்ற பிறகு 3 மாதங்களுக்கு அளிக்கப்படும் அடிப்படை பயிற்சியில் எவ்வாறு ஒருவர் செயல்படுகிறார் என்பதைப் பொருத்து அவரை ஐஏஎஸ்-ஆக நியமிக்கலாமா? அல்லது வேறு பணி நிலையில் நியமிக்கலாமா? எனத் தீர்மானிக்கப்பட உள்ளது. இதுகுறித்து அனைத்து அமைச்சகங்களின் கருத்துகளையும் மத்திய அரசு கேட்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இது தொடர்பாக ராகுல் காந்தி சுட்டுரையில் கூறியிருப்பதாவது:
ஆர்எஸ்எஸ் தேர்வு செய்யும் நபர்களை ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சித்து வருகிறார். தேர்வில் வெற்றி பெற்ற பிறகும், தங்களுடன் இணக்கமாக செயல்படுபவர்களை மட்டுமே உயர் பொறுப்புகளை நியமிக்க பாஜக அரசு சதி செய்து வருகிறது. மாணவர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. ஏனெனில், மாணவர்களின் எதிர்காலத்தையே அழிக்கும் நடவடிக்கை. மாணவர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில்தான் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும். அப்போதுதான் திறமைக்கு உரிய மதிப்பு இருக்கும். அதைவிடுத்து, பயிற்சியில் அவர்களைக் கண்காணிப்பது என்பது முற்றிலும் தவறான செயல்பாடு என்று ராகுல் கூறியுள்ளார்.
தற்போதைய நடைமுறைப்படி ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட நாட்டின் உயரிய பணிகளுக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய குடிமைப் பணி தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மேற்கொண்டு வருகிறது. அதன்படி, முதல் நிலை எழுத்து தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் என மூன்று நிலைகளில் தேர்வுகளை யுபிஎஸ்சி நடத்துகிறது.
அவற்றில் வெற்றி பெறுபவர்களின் மதிப்பெண் மற்றும் தர நிலை அடிப்படையில் அவர்கள் ஐஏஎஸ்-ஆகத் தேர்வாகியுள்ளனரா?, அல்லது ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட வேறு நிலைகளில் தேர்வாகியுள்ளனரா? என்பது அறிவிக்கப்படுகிறது. அதேபோன்று, அவர்களுக்கான துறைகளும், எந்த மாநிலத்தில் பணியாற்ற வேண்டும் என்பதும் யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன் பின்னர் 3 மாதங்களுக்கு அடிப்படை பயிற்சியளிக்கப்பட்டு அவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.