நாடு முழுவதும் ஊழலை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு போன்ற புரட்சிகர நடவடிக்கைளை மேற்கொண்டார் என்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
திரிபுரா பல்கலைக்கழகத்தின் 11-ஆவது பட்டமளிப்பு விழா 5 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை நடைபெற்றது. இதில் 142 ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு வழங்கப்பட்டது. சுமார் 400 மாணவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டார். மேலும் திரிபுரா ஆளுநர் டதகடா ராய், திரிபுரா கல்வித்துறை அமைச்சர் ரத்தன் லால் நாத், துணை வேந்தர் அஞ்சன் குமார் ஜோஷ், பதிவாளர் சாந்தி தேப் ராய் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, இதில் பேசியதாவது:
ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு ஆகியவற்றை அமல்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ. 1.4 லட்சம் கோடி வரி வருவாய் ஏற்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் கூடுதல் வருவாய் கிடைக்கும் என நம்புகிறேன்.
தற்போதைய மத்திய அரசின் நடவடிக்கைகளால் தான் வடகிழக்கு மாநிலங்களின் உள்கட்டமைப்பு மேம்பட்டு இதர பகுதிகளுக்கான போக்குவரத்து சேவைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வர்த்தகமும், பெருளாதாரமும் வலுப்பெற்று வருகிறது என்றார்.