இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக நீதிபதி சி.கே.பிரசாத் இரண்டாம் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரான நீதிபதி பிரசாத், கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரஸ் கவுன்சில் தலைவராக முதல்முறை நியமிக்கப்பட்டார்.
பிரஸ் கவுன்சில் என்பது அச்சு ஊடகங்களைக் கண்காணிப்பதற்கான அரசு அமைப்பாகும். இந்நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், பிரஸ் கவுன்சில் தலைவராக நீதிபதி சி.கே.பிரசாத்தை மத்திய அரசு மீண்டும் நியமனம் செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தலைமையில் மூவர் அடங்கிய தேர்வுக் குழு கடந்த மாதம் கூடி ஆலோசனை நடத்தியபோது, நீதிபதி சி.கே.பிரசாத்துக்கு பதவி நீட்டிப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
பிரஸ் கவுன்சில் சட்டப்படி, ஒரு தலைவரும், 28 உறுப்பினர்களும் கவுன்சிலில் இடம்பெறுவது கட்டாயமாகும்.
இதன்படி, கடந்த மார்ச் மாதம் பிரஸ் கவுன்சிலை மத்திய அரசு புதுப்பித்தபோது 8 உறுப்பினர்களை புதிதாக நியமனம் செய்தது. மீதமுள்ள 20 உறுப்பினர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை.