பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்று சனிக்கிழமையுடன் (மே 26) 4 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை துரோக தினமாக அனுசரிக்க இருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் அசோக் கெலாட், தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் இது தொடர்பாகக் கூறியதாவது:
பாஜகவின் 4 ஆண்டுகளாக ஆட்சியில் மக்கள் அனைத்து இடங்களிலும் துயரத்தையே சந்தித்து வருகின்றனர். அரசு மீது மக்கள் முற்றிலுமாக நம்பிக்கை இழந்துவிட்டனர். தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் பாஜக அரசு நிறைவேற்றவில்லை. எனவே, பாஜக அரசின் 4-ஆவது ஆண்டு நிறைவை துரோக தினமாக அனுசரிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அன்றைய தினத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும். அவர்களின் ஆட்சியின் அவலங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வோம். கடந்த நான்கு ஆண்டுகளில் சமூக பொருளாதார நிலையில் இந்தியாவை மத்திய அரசு பின்னோக்கிதான் இழுத்துள்ளது.
நாடு முழுவதும் அரசுக்கு எதிராக கொந்தளிப்பான மனநிலையில்தான் மக்கள் உள்ளார்கள். இது அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் முழுமையாக எதிரொலிக்கும் என்று அவர்கள் கூறினர்.