கர்நாடக சட்டப்பேரவையில் நீண்ட இழுபறிக்கு பிறகு குமாரசாமி கடந்த புதன்கிழமை முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து, இன்று சபாநாயகர் தேர்தலைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி முதலில் சட்டப்பேரவை சபாநாயகராக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், குமாரசாமி தற்போது நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீரமானத்தை முன்மொழிந்து சட்டப்பேரவையில் பேசி வருகிறார்.
அதன்படி இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க 111 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
ஆனால், அவருக்கு காங்கிரஸ் மற்றும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவோடு பெரும்பான்மை தேவைக்கும் மேலான ஆதரவு உள்ளது. அதுமட்டுமின்றி, குமாரசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் சபாநாயகராக இருப்பதால் வாக்கெடுப்பில் குளறுபடி ஏற்பட வாய்ப்பிருக்காது.