கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் சாந்தி நிகேதனில் வங்காளதேச பவனை பிரதமர் நரேந்திர மோடியும், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவும் கூட்டாக இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனர்.
வங்காளதேச விடுதலைப் போரின்போது இந்தியா, வங்காளதேசம் தொடர்புடைய வரலாற்று ஆவணங்களை பாதுகாக்கவும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை பிரதிபலிக்கும் வகையிலும் மிகப்பெரிய அரங்கம் அமைப்பதற்காக, பிர்பம் மாவட்டம் சாந்தி நிகேதன் பகுதியில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 35 ஆயிரம் சதுர அடி நிலத்தை மேற்கு வங்காளம் மாநில அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் மற்றும் வங்காளதேச கல்வி அமைச்கத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த இடத்தில் 25 கோடி ரூபாய் செலவில் வங்காளதேச பவன் என்ற பெயரில் புதிய அரங்கம் ஒன்றை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா ஆகிய இருவரும் வங்காளதேச பவனை திறந்து வைத்தனர். விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்துகொண்டார். அருங்காட்சியக வளாகத்தை பராமரிப்பதற்கு ரூ.10 கோடி வழங்கப்படும் என வங்காளதேசம் அரசு தெரிவித்துள்ளது.
வங்காளதேச பவன் இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை பறைசாற்றுகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள், விடுதலைப் போர் மற்றும் வங்காளதேசத்துடன் ரவீந்திரநாத் தாகூருக்கு இருந்த நட்புறவு ஆகியவற்றை காட்டும் ஒரு அருங்காட்சியகமும் இந்த வங்காளதேச பவனில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஷேக் ஹசினா, பிரமருடான ஆலோசனைக்கு பின்னர், சனிக்கிழமை இரவு வங்காள தேசம் திரும்புகிறார்.