பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களுடன் வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறார். இந்த உரை நிகழ்ச்சி அகில இந்திய வானொலியின் அனைத்து அலைவரிசைகளிலும் காலை 11 மணிக்கு ஒலிபரப்பு செய்யப்படும். இதில் அவர் பேசியதாவது:
பிளாஸ்டிக் பயன்பாட்டை படிப்படியாக ஒழிப்போம். ஏனென்றால் அதனால் இயற்கை மற்றும் நமது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியது. இதை இந்நேரத்தில் முக்கியமாக கருதி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக வேண்டும்.
ஜுன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் இம்முறை இந்தியாவில் கொண்டாடப்படவுள்ளது. தற்போது பருவநிலை மாற்றத்தை சரிசெய்ய இந்தியா முக்கியப் பங்காற்றிவரும் நிலையில், இந்த நிகழ்வு இங்கு நடைபெறுவது பெருமைக்குரியது.
நமது வாழ்வியல் முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவே தற்போது புழுதிப் புயல், பருவநிலை தவறிய மழை, சூறாவளிக்காற்று உள்ளிட்டவை நமது நாட்டில் ஏற்படுகிறது. இயற்கைக்கு தீங்கு விளைவிக்காதபடி நாம் வாழ வேண்டும். இதை மகாத்மா காந்தி வாழ்ந்து காட்டியவர் என்றார்.
அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்வில் 254 நாட்கள் பாய்மர படகு மூலம் கடல்வழியாக உலகை சுற்றிவந்த கடற்படை வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். பெண்கள் கடற்படையில் இணைய முன் வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
ஃபிட் இந்தியா சவாலில் அனைத்து இளைஞர்களின் பங்களிப்பும் முக்கியமானது என்றார். யோகா நமது ஒற்றுமைக்கான அடையாளமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.