மும்பை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 1 முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மஹாராஷ்டிர விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
விவசாய விளைபொருள் ஏற்றுமதிக்கென தனிக் கொள்கை வகுக்க வேண்டுமென்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கு முன்னதாக மஹாராஷ்டிர விவசாயிகள் நடத்திய போராட்டமானது தேசிய அளவில் பெரும் சலசலப்பை உண்டாக்கியது
இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 1 முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மஹாராஷ்டிர விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
விவசாய விளைபொருள்கள் ஏற்றுமதிக்கென தனி கொள்கையை வகுக்க வேளாண்மைத்துறை ஆராய்ச்சியாளர்களை நியமிக்க வேண்டும். உற்பத்தி கொள்முதலுக்கான அதிகபட்ச ஆதரவு விலையை அறுவடைக்கு 2 மாதங்களுக்கு முன்னதாகவே அறிவிக்க வேண்டும். இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஏக்கர் ஒன்றுக்கு 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்க வேண்டும் என்பவை அவர்களது முக்கியமான கொள்கைகளாகும்.
இதற்கென ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து பத்தாம் தேதி வரை தொடர் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக, 130 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய மகாராஷ்டிராவின் கிசான் கிராந்தி ஜன் அந்தோலன் என்னும் அமைப்பு அறிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து ஜூன் பத்தாம் தேதி நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.