ஹுரியத் பிரிவினைவாத அமைப்புடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தில்லியில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் சனிக்கிழமை அளித்த பேட்டி வருமாறு:
காஷ்மீரில் அனைத்து தரப்பினருடனும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறது என்று ஏற்கெனவே நான் தெரிவித்திருந்தேன். பேச்சுவார்த்தை நடத்த ஹுரியத் பிரிவினைவாதிகள் முன்வரும்பட்சத்தில், அவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும். மத்திய அரசுடன் யார் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினாலும், அவர்களுடன் மத்திய அரசு பேசும்.
மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக ஹுரியத் பிரிவினைவாத அமைப்பிடம் இருந்து ஏதும் விருப்பம் தெரிவிக்கப்பட்டதா? என கேட்கிறீர்கள். அப்படி எதுவும் விருப்பம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பல்வேறு தரப்பினருடனும் மத்திய அரசின் சிறப்பு பிரதிநிதி தினேஷ்வர் சர்மா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றார் ராஜ்நாத் சிங்.
ஜம்மு-காஷ்மீரில் ரமலான் மாதத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கையை நிறுத்தி வைப்பது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, ஹுரியத் பிரிவினைவாத அமைப்புடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மத்திய அரசு கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஹுரியத் பிரிவினைவாத அமைப்புடன் மத்திய அரசு இதற்கு முன்பும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொண்டது. அந்நேரத்தில், "காஷ்மீரை பிரச்னைக்குரிய பகுதி என்று இந்தியா அறிவிக்க வேண்டும்; பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டும்' என்று ஹுரியத் அமைப்பு வலியுறுத்தியது. இதனால், அந்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தது.