கடன் தள்ளுபடி தொடர்பாக விவசாயிகளுடன் கர்நாடக முதல்வர் குமாரசாமி, புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
கர்நாடகத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் முதல்வராகப் பதவியேற்ற பாஜக தலைவர் எடியூரப்பா, விவசாயிகளின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல் கையெழுத்திட்டார். பின்னர் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து காங்கிரஸ் ஆதரவுடன் மஜத கட்சித் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார். பிரசாரத்தின் போது முதல்வராகப் பதவியேற்ற 24 மணிநேரங்களுக்குள்ளாக விவசாயக் கடன் தள்ளுபடி நிறைவேற்றப்படும் என்றார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
தான் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே கடன்பட்டுள்ளதாகவும், கர்நாடக மக்களுக்கு அல்ல. விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை என்றால் முதல்வர் பதவியில் இருந்து விலகுவது மட்டுமல்லாமல் அரசியலில் இருந்தே வெளியேறுகிறேன் எனவும் பேட்டியளித்தார்.
இந்நிலையில், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் முதல்வர் குமாரசாமி, புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நான் மக்களின் ஆசியுடன் அல்லாமல் காங்கிரஸ் தலைவர் ராகுலின் ஆசியுடன் தான் கர்நாடக முதல்வராகப் பதவியேற்றுள்ளேன். எனவே எந்த முடிவாக இருந்தாலும் காங்கிரஸ் உத்தரவுப்படி தான் நான் செயல்பட முடியும். எனவே விவசாய கடன் தொடர்பாக காங்கிரஸ் கட்சியிடம் நிச்சயம் வலியுறுத்துவேன் என்றார்.