ஹைதராபாத்: தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி எம்.பி ஒருவருக்குச் சொந்தமான அலுவலகத்தில் ரூ.60 கோடி அளவுக்கு கருப்புப் பண புழக்கம் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர் சீனிவாச ரெட்டி எம்.பி. இவர் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினைச் சேர்ந்தவர்.
இவரது குடும்பம் சார்பாக “ராகவ் கன்ஸ்ட் டிரக்கன் குரூப்” எனும் கட்டுமான நிறுவனம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இவரது சகோதரர் பிரசாத் ரெட்டி. அந்த கட்டுமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலராக உள்ளார்.
அந்த கட்டுமான நிறுவனத்தில் பெரிய அளவில் வரி ஏய்ப்பு நடப்பதாக புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் ராகவ் கட்டுமான நிறுவனம் தொடர்புடைய 16 இடங்களில் வருமான வரிச்சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகள் நான்கு நாட்கள் நீடித்தன.
அப்போது ஏராளமான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். அந்த ஆவணங்கள் அனைத்தும் தனிப்படை அமைத்து ஆய்வு செய்யப்பட்டன. அவற்றின் மூலம் ராகவ் கட்டுமான நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்திருப்பதும், அது மட்டுமின்றி அந்த நிறுவனத்தில் ரூ. 60 கோடி ரூபாய் கருப்புப் பணம் அந்த நிறுவனத்தில் புழக்கத்தில் இருப்பது தெரிய வந்தது.
இந்த நிறுவனம் நிறுவனம் எந்தெந்த பணிகளுக்கு கருப்பு பணத்தை பயன்படுத்தி உள்ளது என்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரம் குறித்து எம்.பி. சீனிவாச ரெட்டியிடம் வருமான வரித்துறை விரைவில் விசாரணை நடத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.