தில்லி விமான நிலையத்திலிருந்து காந்தஹார் செல்லும் விமானத்தை கடத்த முயன்றதாக சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. அந்த விமானத்திலுள்ள ஆபத்து கால பொத்தானை, விமானி தவறுதலாக அழுத்தியதால் கடத்தல் பீதி ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: ஏரியானா ஆப்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம், 124 பயணிகள், 9 ஊழியர்களுடன் காந்தஹாருக்கு சனிக்கிழமை புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது, விமானத்திலுள்ள "கடத்தல் தடுப்பு' அவசரகால பொத்தானை விமானி தவறுதலாக அழுத்தியதாக தெரிகிறது.
இதனால், தேசிய பாதுகாப்புப் படை உள்பட பல்வேறு அரசு முகமைகளுக்கு தகவல் பறந்தது. இதைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள், அந்த விமானத்தை சுற்றி வளைத்தனர்.
பின்னர், விமானத்துக்குள் நுழைந்த கமாண்டோக்கள், முழுமையான சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து, விமானியின் தவறு தெரியவந்தது. இச்சம்பவத்தால் பயணிகள் மத்தியிலும் பீதி ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் தாமதத்துக்கு பிறகு அந்த விமானம் காந்தஹாருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.