முதல் உலகப் போரில் பங்கேற்ற இந்திய ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்து நூறாண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
இதையொட்டி, பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட தொடர் பதிவுகளில் கூறியுள்ளதாவது:
இன்றுடன் (நவ.11) முதலாம் உலகப் போர் நிறைவடைந்து நூறாண்டுகள் நிறைவடைந்து விட்டன. உலக அமைதிக்காக இந்திய ராணுவ வீரர்கள் முதலாம் உலகப் போரில் பங்கெடுத்தனர்.
இதில் பங்கெடுத்த இந்திய வீரர்களின் துணிவு எப்போதும் நினைவில் கொள்ளப்படும். முதலாம் உலகப் போரில் இந்தியா நேரடியாக பங்கெடுக்கவில்லை என்று அந்தப் பதிவுகளில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸில் உள்ள முதலாம் உலகப் போர் நினைவகத்திலும், இஸ்ரேலில் உள்ள நினைவகத்திலும் தாம் மரியாதை செலுத்தியதையும் மோடி அந்தப் பதிவுகளில் நினைவுகூர்ந்தார்.