மிஸோரம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 28-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, முதல்வர் லால் தன்ஹாவ்லா வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் ரூ. 1 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் தன்னிடம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மனுவில் சொத்து விவரம் குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது: ரூ. 1 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ. 2. 8 கோடி மதிப்பிலான விவசாய நிலங்களும், ரூ. 20 லட்சம் மதிப்பில் மனைகளும், ரூ. 5 லட்சம் ரொக்கத் தொகையும் தன்னிடம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கொல்கத்தாவில் ரூ. 3 கோடி மதிப்பில் வீடு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அய்ஸாலில் வீடு உள்ளதாக குறிப்பிட்ட அவர் அதன் மதிப்பு குறித்து தெரிவிக்கவில்லை.
மேலும், அவரது மனைவி லால் ரிலியானி பெயரில், ரூ. 92 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள், ரூ. 25 லட்சம் மதிப்பில் விவசாய நிலங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மிஸோரம் அந்தஸ்து மற்றும் அடையாளத்துக்கான மக்கள் பிரதிநிதித்துவ கட்சியின் தலைவரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான வன்லால்ரூடா, தன்னிடம் வெறும் 30,000 ரொக்கமும், தனது மனைவியிடம் ரூ.5000 ரொக்கம் மட்டும் உள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரூ.7 லட்சம் மதிப்பில் விவசாய நிலம் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், ஸோரம் மக்கள் இயக்கத்தின் முதல்வர் வேட்பாளர் லால்டுஹோமா, தன்னிடம் ரூ. 70,000 ரொக்க பணமும், ரூ. 1.9 கோடி மதிப்பில் சொத்துகளும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மிஸோ தேசிய முன்னணி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜொராம்தாங்கா, தன்னிடம் ரூ. 10 லட்சம் ரொக்கமும், ரூ. 57 லட்சம் சொத்துகளும் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், ரூ. 20 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ. 1.25 கோடி மதிப்பில் கட்டடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.