நிலத்துக்கான ஒப்பந்தம் ரத்து: அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை கட்டடம் அமைந்துள்ள நிலத்துக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில்,


நேஷனல் ஹெரால்டு பத்திரிகை கட்டடம் அமைந்துள்ள நிலத்துக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், அப்பத்திரிகையின் பதிப்பாளரான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க தில்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தில்லி ஐடிஓ பகுதியில் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிலத்தில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை கட்டடம் அமைந்துள்ளது. கடந்த 56 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் அந்த நிலத்தை அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் பயன்படுத்தி வந்தது. 
இந்நிலையில், அங்கு பத்திரிகை சார்ந்த பணிகள் 10 ஆண்டுகளாக நடைபெறவில்லை என்று கூறி, ஒப்பந்தத்தை ரத்து செய்து, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அண்மையில் உத்தரவிட்டது. வரும் 15-ஆம் தேதிக்குள் வளாகத்தை காலி செய்யவும் உத்தரவிடப்பட்டது.
மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சுனில் கௌர் முன் செவ்வாய்க்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது, மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், நேஷனல் ஹெரால்டு ஆங்கில பத்திரிகையின் டிஜிட்டல் பதிப்பு, வாராந்திர செய்தித்தாளான நேஷனல் ஹெரால்டு ஆன் சன்டே உள்ளிட்டவை, அந்த வளாகத்திலிருந்து வெளியாவதாக வாதிடப்பட்டது. எனினும், மனுவை உடனடியாக விசாரிக்க மறுத்துவிட்ட நீதிபதி, 15-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com