புது தில்லி: 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் 2 பேரைக் கொலை செய்த யாஷ்பால் சிங்கக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரம் தொடர்பான வழக்குகளில், அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.
தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஜய் பாண்டே இன்று அளித்த தண்டனை விவரத்தில், மற்றொரு குற்றவாளியான நரேஷ் ஷெராவத்துக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
தில்லி நீதிமன்றத்துக்குக் குற்றவாளிகள் அழைத்து வருவதில் பாதுகாப்புச் சிக்கல் ஏற்படும் என்பதால், நீதிபதி திஹார் சிறைக்குச் சென்று தண்டனை விவரங்களை அளித்தார்.
நவம்பர் 14ம் தேதி இந்த வழக்கு விசாரணை முடிந்து சீக்கியக் கலவரத்தில் 2 பேரைக் கொலை செய்த வழக்கில், குற்றம்சாட்ட 2 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.
இந்த வழக்கை கடந்த 1994ம் ஆண்டு சாட்சியங்கள் இல்லை என்று கூறி தில்லி காவல்துறை முடித்து விட்டதை அடுத்து, சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் சீக்கியக் கலவர வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.