நிலக்கல்: மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் வாகனம் நிலக்கலில், கேரள காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
அமைச்சரின் வாகனம் மட்டுமே செல்ல அனுமதிக்க முடியும் என்றும், அவருடன் வந்தவர்களின் வாகனத்தை அனுமதிக்க முடியாது என்றும், அவர்கள் கேரள அரசுப் பேருந்து மூலமாகத்தான் பம்பா செல்ல வேண்டும் என்றும் கேரள காவல்துறை தெரிவித்தது.
இதனால், காவல்துறையினருக்கும், பொன். ராதாகிருஷ்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அரசுப் பேருந்துகளை அனுமதிக்கும் போது, தனியாரின் பேருந்துகளை ஏன் அனுமதிக்கக் கூடாது என்று கேட்டார்.
அதற்கு, தனியார் வாகனங்கள் என்றால் பயணிகளை இறக்கிவிட்டு வந்துவிடவேண்டும். அங்கே பார்க் செய்யக் கூடாது என்றார். அதற்கும் பொன். ராதாகிருஷ்ணன் அதிருப்தி தெரிவித்ததால், தனியார் வாகனத்தை அனுமதிக்கும்பட்சத்தில் சபரிமலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தாங்கள் பொறுப்பேற்கத் தயாரா என்று காவல்துறையினர் கேள்வி எழுப்பினர்.
வாக்குவாதத்தைத் தொடர்ந்து, பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் அவருடன் வந்தவர்கள் தங்களது வாகனத்தை விட்டுவிட்டு கேரள அரசுப் பேருந்தில் ஏறி பம்பா சென்றடைந்தனர்.