ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் பெண்களுக்கு உதவுவதற்காக, அவர்களது செல்லிடப்பேசிகளில் "பேனிக்' பட்டனை பயன்படுத்துவதற்கான பரிசோதனை, உத்தரப் பிரதேசத்தில் 47 மாவட்டங்களில் வெற்றிகரமாக நிறைவடைந்து விட்டது என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் மேம்பாட்டுத் துறைத் துறை அமைச்சர் மேனகா காந்தி கூறினார்.
இதுதொடர்பாக, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கிராமப்புற பகுதிகளை உள்ளடக்கிய 47 மாவட்டங்களில், செல்லிடப்பேசிகளில் "பேனிக்' பட்டன் வசதிக்கான பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் பெண்கள், தங்களுடைய செல்லிடப்பேசியில் உள்ள "பேனிக்' பட்டனை அழுத்தினால் உடனடியாக அவரது குடும்பத்தினருக்கும், அந்தப் பகுதியில் உள்ள மூன்று தன்னார்வலர்களுக்கும் தகவல் கிடைத்துவிடும். மேலும், அவர் ஆபத்தில் சிக்கிக் கொண்ட இடம் குறித்த தகவல்களும் ஜிபிஎஸ் கருவி வாயிலாக, உறவினர்களுக்கும், அருகில் உள்ள காவல் நிலையத்துக்கும் கிடைத்து விடும்.
உத்தரப் பிரதேசத்தில் சோதனை முயற்சியாக, பெண்களின் செல்லிடப்பேசிகளில் பேனிக் பட்டன் வசதி அறிமுகம் செய்யப்படும். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
இந்த வசதியை நாடு முழுவதும் விரைவில் கொண்டு வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கேட்டுக் கொள்கிறேன்.
பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக, அனைத்து செல்லிடப்பேசிகளிலும் பேனிக் பட்டன் வசதியை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று மேனகா காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில்
குறிப்பிட்டுள்ளார்.