புது தில்லி: பெட்ரோல், டீசல் விலைகளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து வரலாறு காணாத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த காரணத்தால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அதனைத் தொடர்ந்து மத்திய அரசு வரிவிதிப்பை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கட்சிகளும் அமைப்புகளும் எழுப்பி வந்தன
அதேசமயம் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் அதில் இணைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசலையும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாளாக இருந்து வருகிறது.
இந்நிலையில் விலைகுறைப்பு கோரிக்கையைத் தொடர்ந்து வியாழனன்று பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் 1 ரூபாயும், மத்திய அரசு கலால் வரியில் 1.50 ரூபாயும் குறைக்கிறது என மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து 11 மாநிலங்களும் ரூ. 2.50 குறைப்பை அறிவித்தது. அதனையடுத்து அந்த மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை ரூ.5 அளவுக்கு குறைந்தது.
தற்போது பெட்ரோல், டீசல் விலைகளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:
மதிப்பிற்குரிய மோடிஜி, விண்ணை எட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தயவு செய்து பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வாருங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.