பிரதமர் மோடி ஊழல்வாதி என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியதற்கு பதிலடி தரும் வகையில் மொத்த காந்தி குடும்பமே ஊழல்வாதிகள் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்த போது பிரதமர் மோடி ஊழல்வாதி என்று வியாழக்கிழமை குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலடி தரும் வகையில், பாஜக செய்தித்தொடர்பாளர் சாம்பித் பட்ரா கூறுகையில்,
"ராகுல் காந்தி தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். தேசிய பாதுகாப்பை அவர் கேலிக்கூத்தாக்கி வருகிறார். மொத்த காந்தி குடும்பமே ஊழல்வாதிகள். அவர்கள் அடுத்தவர்களை கைகாட்டுவதா?
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக அனைத்து தகவல்களும் இருப்பதாக இளவரசர்(ராகுல் காந்தி) தெரிவித்து வருகிறார். பிறகு ஏன் அவர் உச்ச நீதிமன்றத்துக்கு செல்லவில்லை?
பிரான்ஸ் முன்னாள் அதிபர் இந்திய பிரதமரை ஊழல்வாதி என்று கூறியதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அவர் எந்த இடத்தில் இவ்வாறு குறிப்பிட்டார் என்பதை வெளியிடுமாறு ராகுல் காந்திக்கு சவால் விடுகிறேன்" என்றார்.