வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒரிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு இடையே கரையைக் கடந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரம் வசிக்கும் 3 லட்சத்திற்கும் மேலான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மத்திய வங்கக் கடலின் மேற்கு பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் நேற்று முன்தினம் புயலாக உருவெடுத்தது. இந்த புயல் ஒடிசா- ஆந்திரா இடையே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன. வானிலை எச்சரிக்கையை தொடர்ந்து ஆந்திராவின் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விழியநகரம் மற்றும் ஒடிசா மாநிலத்தின் கஜபதி, காஞ்சம், பூரி, கேந்திரபாரா மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும் நிவாரண மையங்களுக்கும் அப்புறப்படுத்தப்பட்டனர்.
இன்று அதிகாலை 5.30 மணிளவில், வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா இடையே கோபால்பூர் பகுதியில் டிட்லி புயல் கரையைத் தாக்கியது. அப்போது கடல் அலைகள் பெரும் கொந்தளிப்புடன் காணப்பட்டன. 165 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயல் காரணமாக வட ஆந்திரா மற்றும் ஒடிசாவின் 5 கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
புயல் கரையைக் கடக்கும் பகுதியை வானிலை மையம் முன்கூட்டியே அறிவித்ததால், முன்னெச்சரிக்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். கரையைத் தாக்கியபின்னர் இன்று பிற்பகலுக்குள் புயல் வலுவிழந்து மேற்கு வங்கம் நோக்கி நகரும் என்று புவனேஸ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொல்கத்தாவிலும் இன்று பலத்தமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது