மும்பை கிழக்கு புறநகர்ப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சிவசேனை எம்எல்ஏ துக்காராம் காட்டேவை ஒருவர் கத்தியால் குத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல்துறை துணை ஆணையர் ஷாஹாஜி உமாப் கூறியதாவது: அனுசக்தி நகர் எம்எல்ஏ துக்காராம் காட்டே நவராத்திரி விழாவில் பங்கேற்று விட்டு தன்னுடைய ஆதரவாளர்களுடன் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, காட்டேவை சூழ்ந்து கொண்ட மர்ம கும்பல் அவரை தாக்க முயன்றது. கும்பலில் இருந்த ஒருவர் கத்தியால் எம்எல்ஏவை குத்த முயன்ற போது, எம்எல்ஏவின் ஆதரவாளர் குறுக்கே பாய்ந்து தடுத்ததில் ஒருவர் காயமடைந்தார்.
அந்த கும்பல் எம்எல்ஏவை தாக்க முயன்ற போது, அவருடன் இருந்தவர்கள் காப்பாற்றி அழைத்துச் சென்றதாக துணை ஆணையர் தெரிவித்தார்.
காயமடைந்த எம்எல்ஏ ஆதரவாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் அபாயக்கட்டத்தை தாண்டி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எம்எல்ஏவை தாக்கிய கும்பல் தப்பியதால் அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர்களில் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது கொலை முயற்சி பிரிவான குற்றவியல் தண்டனைச் சட்டம் 307வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.