25 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய பாடல் வரிகளுக்கு "கர்பா' நடனமாடி பார்வையற்ற பெண்கள் அசத்தியுள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் நாட்டுப்புற கலையான "கர்பா' நடனம் அந்த மாநிலத்தில் மட்டுமன்றி இந்தியா முழுவதும் புகழ் பெற்றது. இந்தியர்கள் வாழும் நாடுகளிலும் இது புகழ்பெற்றது. பெண்களின் ஆற்றலையும், பெண் தெய்வத்தின் உருவத்தையும் கொண்டு ஆடப்படும் இந்த நடனத்தை, நவராத்திரியின் போதும், சில நிகழ்ச்சிகளின் போதும் பெண்கள் ஆடுவர்.
"கர்பா புல்லாங்குழலை போன்றது. கர்பா மயிலின் இறகைப் போன்றது. கர்பா என்றால் உண்மை. கர்பா என்றால் குஜராத். கர்பா தாயின் நெற்றியில் இருக்கும் குங்குமம். கர்பாதான் ஆற்றல். கர்பா தெய்வீகம்' என்று கர்பாவின் பெருமையை பற்றி மோடி 25 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருந்தார்.
ஆமதாபாத்தில் உள்ள அந்த் கன்யா பிரகாஷ் குரு அமைப்பைச் சேர்ந்த பார்வையற்ற பெண்கள், மோடி எழுதிய பாடலுக்கு "கர்பா' நடனமாடி நவராத்திரியை கொண்டாடினர்.
நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் நவராத்திரியை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதையொட்டி, மக்கள் அனைவருக்கும் சுட்டுரையில் நவராத்திரி வாழ்த்து தெரிவித்த மோடி, அந்த பார்வையற்ற பெண்கள் நடனமாடிய விடியோவையும் சேர்த்து பதிவேற்றம் செய்தார். அவர் சுட்டுரையில் வெளியிட்டிருந்த பதிவில், "இந்த நடனத்தை பார்க்கும் போது மனம் நெகிழ்கிறது. இவர்களது நடனம் கர்பாவுக்கு உயிர் அளித்துள்ளது. அனைவருக்கும் இந்த நவராத்திரி ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்றாக அமையும் என நம்புகிறேன். கர்பா உலகம் முழுவதையும் இணைக்கும். இயற்கையோடு நம்மை இணைத்து எல்லையற்ற மகிழ்ச்சியை தரக் கூடியது. கர்பா, குஜராத்தின் பாரம்பரியம், சொத்து, பெருமை' என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.