திஹார் சிறையில் கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 52 போலீஸார் மீது சிபிஐ செவ்வாய்கிழமை வழக்குப்பதிவு செய்தது.
தில்லியில் உள்ள திஹார் சிறையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கலவரம் ஏற்பட்டது. அப்போது காஷ்மீரைச் சேர்ந்த 18 உயர் பாதுகாப்பு கைதிகள் மீது தமிழக போலீஸார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்த சூழலில், சிறப்பு காவல் பிரிவு உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி உட்பட தமிழக போலீஸார் 52 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. பாதுகாப்புப் பணியின் போது கைதிகள் தாக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக போலீஸாரும் திஹார் சிறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.