சபரிமலை பம்பையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்குவது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பதற்றமான சூழலில், கேரளத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை புதன்கிழமை மாலை திறக்கப்பட்டது. கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
கோயிலுக்கு வரும் வழியிலேயே பெண் பக்தர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சபரிமலையை சுற்றிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பம்பையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்குவது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் போலீசார், கார் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்குவதோடு காலால் உதைத்தும் கீழே தள்ளுகின்றனர்.
அதுமட்டுமின்றி போலீசார் ஒருவர் இருசக்கர வானத்தில் மேல் வைக்கப்பட்டிருந்த ஹெல்மட்டையும் எடுத்துச் செல்கிறார். தற்போது இந்த வீடியோ வெளியாகி இணையதளத்தில் விமர்சனத்தை கிளப்பி வருகிறது.