சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு தனது பாரம்பரியத்தை ஒருபோதும் விட்டுத்தராது என்று தலைவர் பத்மகுமார் தெரிவித்தார்.
சபரிமலை கோயில் திறக்கப்பட்டதில் இருந்து கோயிலுக்குள் நுழைய பெண்கள் முற்பட்டு வந்தனர். ஆனால், நிலக்கல் பகுதியிலேயே பக்தர்கள் பெண்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். அந்தப் பகுதியில் இருந்த பெண் செய்தியாளர்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டது. இதையடுத்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை தெலங்கானாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவிதா மற்றும் பெண்ணிய ஆர்வலர் ரெஹானா ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்தின் கீழ்பகுதி வரை சென்றனர். அதன்பிறகு, சன்னிதானம் அருகே அவர்களை அனுமதிக்க பக்தர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அந்தப் பெண்களை பாதுகாப்புடன் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டது.
இதனால், சபரிமலை பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வந்தது.
இந்நிலையில், சபரிமலை விவகாரம் தொடர்பாக தேவசம் போர்டு சார்பில் திருவனந்தபுரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேவசம் போர்டு தலைவர், சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான நிகழ்வுகளை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை மூலம் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவர் மேலும் தெரிவித்ததாவது,
"உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான நிகழ்வுகளை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யவுள்ளோம். இந்த அறிக்கையை கேரள உயர் நீதிமன்றத்திலும் ஒப்படைப்போம். தேவசம்போர்டு ஒருபோதும் தனது பாரம்பரியத்தை விட்டுத்தராது. தேவசம் போர்டு நீதிமன்றத்தை நாட இருப்பதால் பக்தர்கள் அமைதி காக்க வேண்டும். தேவசம் போர்டு முடிவுகளுக்கு கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும். வழக்கிறஞர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு எப்போது மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று முடிவு செய்யப்படும்" என்றார்.