ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜிகா வைரஸ் பாதிப்புக்கு புதிதாக 8 பேர் ஆளாகியிருப்பதாக சனிக்கிழமை தெரியவந்தது. இதையடுத்து, அந்த மாநிலத்தில் ஜிகா வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகியோரின் எண்ணிக்கை 117-ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ராஜஸ்தான் சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
ஜிகா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகிய 117 பேரில், தற்போது 98 பேர் உரிய சிகிச்சைக்குப் பிறகு வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டுள்ளனர். கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள், முதல் மூன்று மாதங்களில் ஜிகா வைரஸ் தாக்கத்துக்கு ஆளாவது தொடர்பாக ஆய்வு செய்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவை மாநில சுகாதாரத் துறை சனிக்கிழமை அமைத்துள்ளது.
இந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை குறிப்பிட்ட இடைவெளியில் சுகாதாரத் துறை இயக்குநரிடம் சமர்ப்பிக்கும். சாஸ்திரி நகர் பகுதியில் ஜிகா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால், அப்பகுதியில் வைரûஸ பரப்பும் லார்வாக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ஏடிஸ் வகை கொசுக்கள் மூலமாக பரவும் இந்த வகை வைரஸால், காய்ச்சல், தோல் அரிப்பு, தசைகள் மற்றும் மூட்டு பகுதிகளில் வலி ஏற்படும். கர்ப்பிணிப் பெண்களை எளிதாகத் தாக்கும் இந்த வகை வைரஸால், பிறக்கும் குழந்தையின் தலைப்பகுதி வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.