அமிர்தசரஸ் ரயில் விபத்துக்கு தனது மனைவி காரணம் இல்லை, அதற்கு ரயில்வேத்துறை தான் முழுப் பொறுப்பு என பஞ்சாப் அமைச்சர் சித்து விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து கூறுகையில்,
அமிர்தசரஸ் ரயில் விபத்து தொடர்பாக எந்தவொரு விசாரணையும் நடத்தப்படாமல் அந்த ரயில் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மீது தவறில்லை என்று எப்படிக் கூற முடியும். அந்தப் பகுதியில் அத்தனை வேகத்தில் ரயில் இயக்கப்பட என்ன காரணம். அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர் என்று ரயில்வே கேட் பராமரிப்பாளர் எதற்கு முன்கூட்டியே ரயில் ஓட்டுநரிடம் தெரிவிக்கவில்லை என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
மேலும் இதற்கு ரயில்வேத்துறையின் அலட்சியப்போக்கு தான் முக்கிய காரணம் எனவும் விபத்து நடந்த பகுதி மத்திய அரசுக்கு சொந்தமானது எனவும் தெரிவித்தார்.
முன்னதாக, அமிர்தசரஸில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ராவண வதம் நிகழ்வில் சித்து மனைவி நவ்ஜோத் கௌர் தலைமை வகித்தார். அப்போது ஏற்பட்ட ரயில் விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
நவ்ஜோத் கௌரை காண கூடிய கூட்டத்தால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக உள்ளூர்வாசிகள் கூறிவரும் நிலையில், விபத்து நடப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே அந்த இடத்தில் இருந்து கிளம்பிவிட்டதாக நவ்ஜோத் கௌர் தெரிவித்தார். ஆனால், அவர் அப்போது அங்கு இருக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதுபோன்று இந்த விபத்தானது இயற்கைப் பேரிடர் என்று கூறிய நவ்ஜோத் சிங் சித்து, இதற்கு தனது மனைவி பொறுப்பாக முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
தமிழகத்துக்குச் செல்வதற்குப் பதிலாக பாகிஸ்தான் செல்வது சிறப்பானது என கடந்த வாரம் நவ்ஜோத் சிங் சித்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.