புது தில்லி: ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்சப் புகாரை விசாரிக்க தனிக்குழுவை சிபிஐ நியமித்துள்ளது.
சமீபகாலமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. தனது விசாரணை நடவடிக்கைகளில் அலோக் வர்மா தலையிடுவதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் அண்மையில் அஸ்தானா புகாரளித்திருந்தார். அதேசமயம் வழக்கு ஒன்றில் தொழிலதிபரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இதன் காரண்மாக இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவிற்கு சிபிஐ இயக்குநராக தற்காலிக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்சப் புகாரை விசாரிக்க தனிக்குழுவை சிபிஐ நியமித்துள்ளது. நாகேஸ்வர் ராவ் நியமித்துள்ள இந்த குழுவிற்கு சதிஷ் தாகரை நியமனம் செய்துள்ளார். இந்த விசாரணைக் குழுவில் சிறந்த அதிகாரிகள் இடம்பெற்று உள்ளனர் என்றும், விசாரணை பாரபட்சமின்றி நடைபெறும் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.