புது தில்லி: மோடியின் ஊழல் படகு விரைவில் மூழ்கும் என்று ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவை முன்வைத்து காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு ரூ.58 ஆயிரம் கோடிக்கு வாங்கியது. இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாணை புதனன்று நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ரஃபேல் போர் விமானம் குறித்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதற்கான தகவல்களை பொது இணையதளத்தில் மத்திய அரசு வெளியிட வேண்டும். ஒவ்வொரு விமானமும் எவ்வளவு விலைக்கு வாங்கப்பட்டது என்பது தொடர்பான விலைப் பட்டியலை சீல் வைக்கப்பட்ட உறையில் 10 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத் தகவல்களை பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பது கொள்கை முடிவாக இருந்தால் அது குறித்தும் பதில் மனுவில் தெரிவிக்கலாம் என்றும், நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த தகவல்களைக் கோருகிறோம் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் மோடியின் ஊழல் படகு விரைவில் மூழ்கும் என்று ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவை முன்வைத்து காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விடியோ செய்தியில் தெரிவித்துள்ளதாவது:
ஊழலால் நிரம்பியுள்ள பாஜக ஆட்சியானது, இனிமேலும் விசாரணைக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியாது.
குற்றவாளிகள் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையிலிருந்து தப்பி ஓட முடியாது.
ரஃபேல் போர் விமான ஒப்பந்ததின் தோல்வி என்பது, வெளிப்படைத்தன்மை, மேக் இன் இந்தியா, அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க இயலாத தன்மை ஆகியவற்றின் ஒட்டுமொத்த தோல்வியாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.