வரதட்சணைக் கொடுமை புகார் அளித்தால் உடனடியாகக் கைது செய்யலாம்: உச்ச நீதிமன்றம்
புது தில்லி: வரதட்சணைக் கொடுமை குறித்து புகார் அளித்ததும் உடனடியாகக் கைது செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வரதட்சணைக் கொடுமை வழக்கில் விசாரணைக்குப் பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடனடியாகக் கைது செய்ய தடை விதித்தும் உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில், வரதட்சணைக் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்த உடனே நடவடிக்கை எடுக்கலாம், புகார் கொடுக்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். வரதட்சணைக் கொடுமைப் புகாரில் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
வரதட்சணைக் கொடுமை செய்ததாக பெண்கள் அளிக்கும் பொய்ப் புகார்களால், குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்படுவதாகவும், உணர்ச்சி வேகத்தில் புகார் அளிக்கும் போது கணவன் மற்றும் கணவன் வீட்டார் கைது செய்யப்படுவதால் குடும்ப வாழ்க்கையே சிதைந்துப் போவதாகவும் கூறி, வரதட்சணைக் கொடுமை புகாரில் உடனடியாகக் கைது செய்யக் கூடாது என்றும், கைது செய்வதற்கு முன் வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.