கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவு காரணமாக பதவியிலிருந்து விலக விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவா முதல்வரும், முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்த மனோகர் பாரிக்கர் கடந்த மார்ச் மாதம் கணைய நோய் பாதிப்பு காரணமாக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடித்து இரு மாதங்கள் கழித்து ஜூன் மாதம் நாடு திரும்பினார். பின்னர் மருத்துவப் பரிசோதனைக்காக மீண்டும் கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்று வந்தார்.
இந்நிலையில், மனோகர் பாரிக்கர் உடல் நலம் பாதிக்கப்பட்டு வடக்கு கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடல்நிலை காரணமாக தற்போதைய சூழலில் நிர்வாகப் பொறுப்புகளை கவனிக்க முடியாத காரணத்தால் பாரிக்கர், கோவா முதல்வர் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இதுகுறித்து பாஜக தலைமைக்கும் அவர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே கோவா புதிய முதல்வரை தேர்வு செய்ய பாஜக மேலிடம் முடிவுசெய்துள்ளதாகவும், அக்கட்சியின் மத்தியக் குழு திங்கள்கிழமை கோவா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே மருத்துவ மேல் சிகிச்சைக்காக மனோகர் பாரிக்கர், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சனிக்கிழமை வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.